விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றும் காவலர்களை மாதமிருமுறை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்குவதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் கடந்த இரு வாரங்களில் திருக்கோவிலூர் அருகே உள்ள அதண்டமருதூர் கிராமத்தில் பிறந்து 17 நாட்களே ஆன பெண் குழந்தையைக் கொன்று ஆற்றில் புதைத்த சம்பவத்தில், குற்றவாளி வரதராஜ் மற்றும் கொலைக்குத் தூண்டுதலாக இருந்த துரைக்கண்ணு ஆகிய இருவரையும் கைது செய்த திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் மற்றும் காவலர்கள் என 7 பேருக்கும்;
கண்டமங்கலம் அருகே உள்ள பெரியபாபு சமுத்திரத்தில் நிலத்தகராறு காரணமாக 50 வயது பெண்மணியைக் கொலை செய்த குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்த கண்டமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், முதல் நிலை காவலர்கள் மற்றும் மோப்ப நாய் கையாளுபவர்கள் 16 பேர் என மொத்தம் 23 பேரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிசுகள் வழங்கி பாராட்டி கௌரவித்தார்.
இதேபோல் புதுச்சேரி மது வகைகளை கடத்திய நபர்களைக் கைது செய்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் ஒப்படைத்த , விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகியோரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
இதற்கிடையே கண்டமங்கலம் பெண்மணி கொலை வழக்கில் 24 மணி நேரத்தில் குற்றவாளியைப் பிடிக்க பெரும் உதவியாக இருந்த மோப்பநாய் ராக்கிக்கும் பதக்கம் வழங்கி காவல் கண்காணிப்பாளர் கௌரவித்தார். இந்த நிகழ்வின் போது காவல்துறை தனிப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தார்.
இதையும் படிங்க:
மெச்ச தகுந்ந பணி; ஆட்டோ ஓட்டுநர் உள்பட 36 காவலர்களுக்கு எஸ்.பி.பாராட்டு