என்.எல்.சி நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்த பழனிவேல் என்பவர் கடந்த ஜூலை 16ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். பின்னர், விழுப்புரம் மாவட்டம் செம்பாக்குறிச்சி வனப்பகுதி என்ற இடத்திற்கு அருகே அவரின் உடலை காருடன் தீ வைத்து எரிக்க முயன்றபோது, காவல்துறையினரின் கண்களில் பட, தீயை அணைத்து பழனிவேலுவின் உடலை மீட்டனர்.
கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்காக அவரது மனைவி, மைத்துனரால் கூலிப்படையினர் மூலம் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பின்னர், வழக்குப்பதிவு செய்து பழனிவேலுவின் மனைவி மஞ்சுளா, அடுத்த நாளே கைது செய்யப்பட்டார். கொலையில் தொடர்புடைய நாமக்கல்லைச் சேர்ந்த இரண்டு கூலிப்படையினர் வெற்றிவேல், மணிகண்டன் ஆகியோர் அடுத்த பத்து நாட்களில் கைது செய்யப்பட்டார்கள்.
ஆனால், வழக்கின் முதல் குற்றவாளியான மைத்துனர் ஆதிராமலிங்கம் என்பவர் கடந்த 45 நாட்களாக காவல்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்துள்ளார். தலைமறைவாக இருந்த ஆதிராமலிங்கத்தை தொடர்ந்து கண்காணித்து வந்த காவல்துறையினர், இன்று கள்ளக்குறிச்சி அடுத்த வீ கூட்ரோடு என்ற இடத்தில் காரோடு மடக்கிப் பிடித்து கைது செய்தனர். ஆதிராமலிங்கத்தின் மீது கொலைக்குச் சதி செய்தல், கொலை செய்தல், தடயங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.