கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஊரடங்கு தொடங்கியது முதலே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கி பணிபுரிந்து வரும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமானம் இன்றி பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், மத்திய - மாநில அரசுகள் கடந்த சில நாட்களாக, குடிபெயர்ந்த தொழிலாளர்களை சிறப்பு ரயில்கள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து வருகின்றன.
அந்த வகையில், மும்பையில் இருந்து திருநெல்வேலி வந்தடைந்த சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 650 பேர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
இவர்களை அம்மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரையும் பிற அலுவலர்களும் நேரில் சென்று வரவேற்றனர். தொடர்ந்து, அனைவரும் விழுப்புரத்தைச் சுற்றியுள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க : சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய காவலர்... நேரில் சென்று நலம் விசாரித்த ஆட்சியர்