விழுப்புரம் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் முறைகேடுகளை தடுப்பதற்காகவும், தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் தேர்தல் அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திண்டிவனம் அடுத்த கூட்டு சாலையில் ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திருவேங்கடம் தலைமையிலான தேர்தல் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்து கொண்டிருந்த கர்நாடக மாநில காரை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரித்தனர். அதில் அவர் பெயர் மஞ்சுநாத் (34) என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி காரில் ரூ.1.34 லட்சம் பணம் எடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தேர்தல் அலுவலர்களிடம் செஞ்சியில் நடைபெறும் திரைப்பட படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக செல்வதாக மஞ்சுநாத் தெரிவித்தார்.
இருப்பினும், அவரிடம் ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அலுவலர்கள், திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: கரூரில் ரூ.2.93 லட்சம் பணத்தை கைப்பற்றிய பறக்கும் படை!