வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், ஏழை எளிய பெண்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள் வழங்கினார்.
பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், ” எனது தந்தையும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலை மிக சீராக உள்ளது. அரசியலில் வெற்றி தோல்வி என்பது 5 ஆண்டுகள்தான். 2020ஆம் ஆண்டு தை மாதத்திற்கு பின்னர் கேப்டன் எப்படி மீண்டு வருகிறார் என்பதைப் பாருங்கள் என்றார்.
பின்னர், மேடையில் தொண்டர்களுக்கு மத்தியில் கண்ணீர்விட்டு அழுதபடியே விஜயகாந்த் உடல்நிலை சீராகவும் சிறப்பாகவும் உள்ளது. ஆனால் அனைவரும் அவருடைய உடல்நிலை குறித்து அவதூறு பேசிவருகிறார்கள். அவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு என்னுடைய தாயார் பிரேமலதா கட்சியை வழி நடத்தி வருகிறார் என்று கூறினார்.
மேலும், மக்கள் அவரை தூக்கி எறிந்தாலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மக்கள் சேவை செய்ய விரைவில் குணமடைந்து வருவார் என்றார்.