வேலூர்: வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் சரகத்தில் இன்று மாவட்ட காவல்துறை சார்பில் விபத்துகளை தடுக்கும் வகையில் புதிதாக ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள பேரிக்காடுகள் மற்றும் சாலை பாதுகாப்பு கூம்புகளை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் காவல் நிலையங்களில் ரோந்து இருசக்கர வாகனங்களையும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
பின்னர் டிஐஜி முத்துச்சாமி, எஸ்பி ராஜேஷ் கண்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். முதலில் பேசிய வேலூர் எஸ்பி, "வேலூர் மாவட்டத்தில் கடந்த 2021-22 ஆம் ஆண்டுகளில் அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டு விபத்து எண்ணிக்கையை விட இந்தாண்டு விபத்தின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகமாகியுள்ளது. இதனையடுத்து விபத்துகளை குறைக்க காவல்துறையால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் பேரில் விபத்துக்களை தவிர்க்கவும் ஒவ்வொரு மாதமும் ஏன் விபத்துகளின் காரணங்களையும் கண்டறியவும் காவல் துறையினரால் ஆலோசனைகள் செய்யப்பட்டது. அதன் பின்னர் ஜனவரி மாதம் 95 விபத்துகளும், பிப்ரவரி மாதம் 89 விபத்துகளும், மார்ச் மாதம் 73 விபத்துகளும் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதை காண முடிகிறது.
குறிப்பாக ஜனவரி மாதம் 26 பேரும், பிப்ரவரி மாதம் 18 பேரும், மார்ச் மாதம் 16 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதே விபத்துகள் ஏற்படவும் உயிரிழப்புகளுக்கும் அதிக காரணமாகிறது. மேலும் விபத்துகளை தடுக்க சாலை பாதுகாப்பு உபகரணங்கள் அதிகளவில் தேவைபடுகின்றன. அதற்காக தமிழக அரசினால் கூடுதல் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இது வரையில் வேலூர் மாவட்டத்தில் ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் 485 பேரிகார்டுகளும், சாலை பாதுகாப்பு கூம்புகளும் வாங்கப்பட்டுள்ளன" என்றார்.
பின்னர் பேசிய டிஐஜி முத்துசாமி, "இந்த பேரிகார்டுகள் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுபவர்களை தடுக்கும் வகையில் வைக்கப்பட உள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூரில் இயங்கி வந்த ஐந்து தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் விபத்து ஏற்பட்டால் உதவி செய்யும் பணியை மேற்கொண்டு வந்தன.
தற்போது அவர்களுக்கு கூடுதலாக விபத்துக்கள் ஏற்படாத வகையில் பணி மேற்கொள்ளவும் பல்வேறு அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது இவர்கள் வழக்கு பதிவு செய்ய செய்ய மாட்டார்கள். அவர்கள் குறைந்தது போக்குவரத்து விதிகளை மீறும் 100 பேரை கண்டறிந்து அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக வேலூர் மாவட்டத்தில் 53 இடங்கள் விபத்துக்கள் ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் காவல்துறையும் விஐடி-யும் இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அங்கு எதேனும் விபத்துகள் ஏற்படும்பொழுதும் அவ்வாறு ஏற்ப்படும் விபத்துகளை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்து அதனை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
வேலூர் சரகத்தில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் விபத்துகளினால் ஏற்ப்படும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக விபத்துகள் மாலை 5 மணி முதல் ஒன்பது மணி வரை அதிகளவில் நடைபெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே வேலூர் சரகத்தில் அனைத்து காவலர்களும் மாலை 5 மணி முதல் இரவு ஒன்பது மணி வரை பொதுமக்கள் கண்ணில் படும் படியாக சாலையில் நின்று பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடபட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் கடந்த மார்ச் மாதம் மட்டும் 16 சதவீதம் விபத்தால் ஏற்படும் மரணம் குறைந்துள்ளது என்றும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் வெளி மாநில குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும் மக்கள் பாதுகாப்பிற்காக இரவு நேரங்களில் ரோந்து வாகனங்களை அதிகப்படுத்தி உள்ளோம் எனவும் மேலும் ஆபரேஷன் ஸ்டாமிங் மூலம் ரயில்வே நிலையம் பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திடீர் சோதனை செய்யப்பட்டும் வருகிறது. கடந்த மாதங்களில் ஒப்பிடும் போது மார்ச் மாதம் குற்ற வழக்குகள் கணிசமாக சற்று குறைந்துள்ளன. கிராமங்களிலும் கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக மக்களின் பாதுகாப்பிற்கு உறுதியளித்தார்.
இதையும் படிங்க: தென்காசி இளம்பெண் கடத்தல் வழக்கில் அடுத்தடுத்த திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!