ராஜீவ் கொலை குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், இரண்டு மாத பிணைக்கு பிறகு இன்று புழல் சிறைக்கு திரும்பினார். இந்நிலையில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “இரண்டு மாத பிணை முடிந்து இன்று என் பிள்ளை சிறைக்கு செல்கிறார். கடந்த 29 வருடங்களுக்கு முன்பாக விசாரித்துவிட்டு அனுப்புகிறேன் என்று கூட்டி சென்றார்கள்.
தற்போது அவனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் வருகின்ற 21, 22ஆம் தேதிகளில் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை உள்ளது. அதற்காக மறுபடியும் பிணை நீட்டித்து கேட்டோம், கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். நேற்றுவரை எந்த தகவலும் தெரியவில்லை.
தமிழ்நாடு முழுவதும் மக்கள் பொங்கல் விழா குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள். நாங்களோ பேரறிவாளனுக்காக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை.
எனது மகன் பேரறிவாளனுக்கு சிறுநீரக தொற்று பாதிப்பு இருப்பதால், இன்னும் கூடுதலாக ஒரு மாதம் பிணை வேண்டும். முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எனது மகனை என்னிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதி கொடுத்தார். அதனால் இந்த அரசு எனது மகன் விடுதலை குறித்து பரிசீலிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...கொதிக்கும் நீரை முகத்தில் ஊற்றிய டிஐஜி - துடிதுடித்த ராணுவ வீரர்!