ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனமான பாரதமிகு மின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது தொழிற்சாலைக்குச் சொந்தமான இடத்தில், அத்தொழிற்சாலையைச் சுற்றி, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தச் சுற்று சுவரை எழுப்புவதன் மூலம் லாலாப்பேட்டை, முகுந்தராயபுரம், சீகராஜபுரம், தக்கம்பாளையம், ஏகாம்பரநல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி, வரும் சாலைகள் தடைபட்டு போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படும் எனவும், குறிப்பாக முகுந்தராயபுரம் ரயில் நிலையம் செல்ல இயலாத சூழ்நிலை ஏற்படுவதாகவும், ரயில் நிலையத்திற்குச் செல்ல சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டும் எனவும், அது மட்டுமல்லாது சில பகுதிகளில் நீர்நிலைப் பகுதிகளை நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்ய முயல்வதாகவும் கூறி, 10 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் லாலாப்பேட்டை பேருந்து நிலையத்தின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை பெல் நிர்வாகம் உடனடியாக கைவிடவேண்டும் என வலியுறுத்தி,முழக்கங்களை எழுப்பியதோடு, திடீரென சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால், அவர்களை ராணிப்பேட்டை காவல் துறையினர் கைது செய்து, தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை காவல் துறையினர் கைது செய்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: குரூப் 4 கலந்தாய்விற்கு 11,138 தேர்வர்களுக்கு அழைப்பு