வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அடுத்த சீத்தாராம்பேட்டையை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(46). இவர் இன்று (மார்ச்9) காலை குடியாத்தம் கே.வி. குப்பம் சாலையில் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் அடுத்த வேப்பனேரி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த காரானது ஜெய்சங்கரின் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஜெய்சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விபத்து ஏற்படுத்திய காரானது நிற்காமல் சென்றது.
இது குறித்து மாலை வரை கே.வி. குப்பம் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரை கைது செய்ய வேண்டும், உயிரிழந்த ஜெய்சங்கர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி ஜெய்சங்கரின் உறவினர்கள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கே.வி. குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு குடியாத்தம்-காட்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல் துறையினரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகே அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். தற்போது இது குறித்து கே.வி.குப்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொது மக்களின் இந்த திடீர் சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 52 பவுன் வகை பறிமுதல், கொள்ளையர்கள் இருவர் கைது: காவல் துறையினர் அதிரடி