வேலூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அசோகன், வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் நேற்று காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்ற வடக்கு மண்டல காவல் துறை தலைவர் (ஐஜி) நாகராஜன் திடீரென உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி நேற்று முதல் இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதற்கான காரணம் என்ன என்பது வெளியிடப்படவில்லை. ஒரே நேரத்தில் காவல் துறையில் அதிகாரமிக்க அலுவலர்கள் இரண்டு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள சம்பவம் காவல் துறையினரிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரித்தபோது, காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த அசோகன், நாகராஜ் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு குற்றச்செயல்களுக்குத் துணைபோனதாகக் கூறப்படுகிறது. சமீபகாலமாக சூதாட்டம், மணல் கொள்ளை, குட்கா விற்பனை வேலூரில் கொடிகட்டி பறக்கிறது.
ஆனால் காவல் துறை கண்டுகொள்ளாமல் கையூட்டுப்பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த வடமாநில நபர் ஒருவர் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை மறைமுகமாக விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. அவரை கைதுசெய்து விசாரணை நடத்தியபோது ஆய்வாளர் அசோகன், நாகராஜன் இரண்டு பேருக்கும் அவருடன் தொடர்பிருப்பது தெரியவந்தது.
இது போன்ற பல்வேறு புகார் காரணமாகவே ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் மாற்றப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மகாத்மா காந்தியின் சிலை முற்றிலும் நாசம்; அம்ரெலியில் பரபரப்பு!