வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பீஞ்சமந்தை, ஜார்தான் கொல்லை, பலாம்பட்டு, நிம்மங்காணாறு, பன்னிக்குட்டி பள்ளம், கங்காச்சரம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் எந்த அளவிற்கு விவசாயம் நடக்கிறதோ அதை விட பல மடங்கு கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அடர்ந்த மலைப் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல், அதனை இரவு நேரங்களில் பைக் மூலம் லாரி டியூப்களில் கட்டி கொல்லமங்கலம், கரடிகுடி, தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கடத்துவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், கள்ளச்சாராய கும்பலை பிடிக்க வேலூர் சரக டிஐஜி முத்துசாமி உத்தரவின் பேரில், வேலூர் மாவட்ட எஸ்.பி ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில் 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 165 காவலர்கள் வேப்பங்குப்பம், அணைக்கட்டு, அரியூர் பேரணாம்பட்டு, குடியாத்தம் கிராமிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மலை பகுதிகளில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
ட்ரோன் கேமராக்கள் மூலம் மலைப்பகுதி முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது அடர்ந்த வனப்பகுதியில், சாராய ஊறல்களை பதுக்கி வைத்திருந்து கண்டறியப்பட்டது. இதையடுத்து 17,350 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றிய போலீசார், அவற்றை கீழே கொட்டி அழித்தனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பேரல்கள், மண் பானைகள், அடுப்பு ஆகியவற்றையும் போலீசார் அழித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கள்ளச்சாராய விற்பனை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.