கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனால் மாநிலத்திலுள்ள திரையரங்குகள், சுற்றுலாத் தலங்கள், பூங்காக்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களை மார்ச் 31ஆம் தேதி வரை மூடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்தியா முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஆந்திர எல்லையான குடியாத்தம், பேர்ணாம்பட்டில் நடைபெற்று வரும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரவேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "குடியாத்தம் பகுதியில் மூன்று எல்லைகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்குள் அத்தியாவசிய வாகனங்களைத் தவிர பிற வாகனங்களுக்கு அனுமதி இல்லை. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 45 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. மாவட்ட நிர்வாகம் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல் - உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா மூடல்!