வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கோட்டை நத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவி. இவரது இளைய மகள் திவிதா (19). இந்நிலையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஷியாம் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், வீட்டில் எதிர்ப்பு கிளம்பவே பாதுகாப்பு வழங்கக் கோரி காதல் ஜோடி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த திங்கள் கிழமை முறையிட்டனர்.
அதனடிப்படையில் மேலப்பாடி காவல் துறையினர் நேற்று இருதரப்பு வீட்டாரையும் அழைத்து சமரசம் பேசினர். அப்போது திவிதாவின் தந்தை, ' தயவு செய்து என்னுடன் வந்து விடு ' என காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தந்தையை காலில் தள்ளிவிட்டு, திவிதா தனது காதலனுடன் சென்றுள்ளார்.
இதனால் மனமுடைந்த ரவி, சோகத்தில் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மேல்பாடி காவல் துறையினர் ரவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: சோடா பாட்டிலால் காதலியைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட காதலன்
பொதுவாக காதலுக்காக எதையும் இழக்க தயார் என்று கூறுவார்கள், ஆனால் இந்தப் பெண் காதலுக்காக தன்னை பெற்றெடுத்து ஆளாக்கிய தந்தையையே பறிகொடுத்த சம்பவம் வேலூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.