வேலூர் மாவட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிக்கு மாற்றாக மகளிர் சுய உதவிக்குழுவினர் காகிதக் கவர்கள், காட்டன் துணிப்பைகள், வாழை இலைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வது குறித்து நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு சிறப்பு செய்தி தொகுப்பு ஒன்றை வெளியிட்டது. மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் நாம் பேசும்போது, ஆரம்பத்தில் நெகிழிக்கு மாற்றாக காகிதக் கவர்களுக்கு அதிக வரவேற்பு இருந்ததாகவும், நாளடைவில் மீண்டும் நெகிழிப் பயன்பாடு அதிகரிப்பதால் விற்பனை குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகம்சுந்தரத்திடம் கேட்டபோது, ”வேலூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இருப்பினும், அண்டை மாநிலங்களிலிருந்து கொண்டுவந்து குடோனில் பதுக்கிவைத்துள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளோம். தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து நெகிழிப் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாம் வழங்கிய தகவலை அடிப்படையாகக் கொண்டு நேற்று வேலூர் மாவட்டத்தில் நெகிழிப் பொருள்கள் தொடர்பாக திடீர் ஆய்வு நடத்த உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சுரேஷ் தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வில், வேலூர் கேஎம் செட்டி தெருவில் குடோனில் பதுக்கிவைத்திருந்த தடைசெய்யப்பட்ட இரண்டு டன் நெகிழியை பறிமுதல் செய்தது. பின்னர், குடோனுக்கு மாநகராட்சி, வருவாய் அலுவலர்கள் சீல் வைத்தனர். இனியும் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தினால் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: வேலூர் மகளிர் குழுவினரின் நெகிழி ஒழிப்பு புரட்சி! - சிறப்புக் கட்டுரை