வேலூர்: 75 ஆவது சுதந்திர தின அமுத பெரு விழாவையொட்டி வேலூர் மாவட்டத்தில், ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று மாலை அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் அரசு உத்தரவின்படி ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இது தொடர்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் பள்ளி கல்லூரிகள் பொதுமக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள் அனைத்து நியாய விலை கடைகள் என அனைத்து இடங்களிலும் தேசிய கொடிகளை ஏற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். தேசிய கொடிகளை விநியோகம் செய்ய சுமார் மூன்று லட்சம் தேசிய கொடிகளை மகளிர் குழுக்கள் மூலம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொடிக்கம்பங்கள் இல்லாத இடங்களில் உடனடியாக கொடி கம்பங்கள் நட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். நியாயவிலை கடைகளில் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்படும் எனவும், தேசிய கொடிகள் வாங்க முடியாத பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக இலவசமாக தேசிய கொடிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகள் கல்லூரிகளில் ஒரு வார காலத்திற்கு தேசிய கொடி சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் அனைத்து பேருந்துகளிலும் தேசியக்கொடி தொடர்பாகவும் வீடியோ காட்சிகள் மற்றும் பேருந்துகளில் வண்ணங்களை தீட்டியும் விழிப்புணர் ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறினார். மேலும் அனைத்து உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களிலும் ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரைதேசிய கொடி ஏற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்: பிரமாண்ட விழிப்புணர்வு கோலம்!