திருபத்தூர் நகரின் முக்கியமான சாலையில் பெட்ரோல் ஆட்டோக்கள் இயக்க தடை பிறப்பித்திருப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பாளரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று (பிப். 06) கோரிக்கை மனுவை அளித்தனர்.
அதில், திருப்பத்தூர் நகரத்தில் உள்ள பெட்ரோல் ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு இடையூறு இன்றியும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் ஆட்டோக்களை இயக்கி வருகிறோம்.
சமீபத்தில், தமிழ்நாடு அரசு திருபத்தூரை மாவட்டமாக அறிவித்த பின்னர், மாவட்ட உயர் அலுவலர்கள் நகரத்தின் முக்கிய சாலைகளில் பெட்ரோல் ஆட்டோக்களை இயக்கக் கூடாது என தடை விதித்துள்ளனர். இதனால் ஆட்டோ ஓட்டுநகர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிட்டனர்.
மேலும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், நோயாளிகள் அவசர காலத்தில் ஆட்டோக்கள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதியும், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கருதியும், நகரின் முக்கிய சாலைகளில் ஆட்டோக்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர், கண்காணிப்பாளர், ஆட்சியர் ஆகியோர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அன்புச்செழியனிடம் ரூ. 77 கோடி பறிமுதல் - வருமான வரித்துறை அறிக்கை