வேலூர்: சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (22) வலுதூக்கும் வீராங்கனையான இவரது தாய் லட்சுமி, தந்தை தாஸ். பீடி சுற்றும் தொழில் செய்துவந்த தாஸ் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் கவிதாவுக்கு நான்கு வயது இருக்கும்போதே உயிரிழந்தார். தன் ஒற்றை மகள் கவிதாவை கரைசேர்க்க தாய் லட்சுமி அன்று தொடங்கிய போராட்ட வாழ்க்கை தற்போதுவரை தொடர்கிறது.
வறுமையிலும் கல்வி
லட்சுமி, தினக்கூலி அடிப்படையில் வேலூர் மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவருகிறார். தான் பட்ட துன்பங்களை தன் மகள் படக்கூடாது என்றும், கல்வி ஒன்றே நம்மைப் போன்றவர்களை உயர்த்தும் என்பதை உணர்ந்த லட்சுமி, கவிதாவை இளங்கலை ஆங்கிலம் படிக்கவைத்து, தற்போது உடற்கல்வித் துறையில் சேர்த்து படிக்கவைத்து-வருகிறார்.
இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் தனது மகள் ஆசைப்பட்ட வலுதூக்கும் விளையாட்டிலும் சாதிக்க ஊக்கப்படுத்திவருகிறார். மாணவி கவிதா, அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த சத்தீஷ் சிவலிங்கம் என்பவர் வலுதூக்கும் போட்டியில் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார்.
இதனைப் பார்த்த கவிதா சதீஷ் சிவலிங்கத்தைத் தனது முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தானும் அதுபோல வலுதூக்கும் போட்டியில் பங்கேற்று நாட்டுக்குப் பெருமை தேடித் தருவேன் எனக் கவிதா கூறவே, மகள் மீது உள்ள நம்பிக்கையில் அவர் பதினோராம் வகுப்பு படிக்கும்போதே பயிற்சி கூடத்தில் சேர்த்துள்ளார் லட்சுமி.
தேசிய அளவில் தாயின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு பல தடைகளை உடைத்து ஒவ்வொரு படியாக முன்னேறிவருகிறார் கவிதா. மாவட்ட, மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் பங்கேற்று பல பதக்கங்களையும், சான்றிதழ்களையும் குவித்துள்ளார்.
இறுதியாக தேசிய அளவில் கோவாவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார். இதன்மூலம் வரும் மே மாதம் கஜகஸ்தானில் நடைபெற உள்ள பன்னாட்டு அளவிலான போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளார்.
அங்கு நடைபெற உள்ள பன்னாட்டுப் போட்டியில் பங்கேற்க போதிய பொருளாதார வசதி இல்லாததால் தனது கனவை எண்ணி கவலையுற்றுள்ளார் கவிதா. இதற்காக அரசோ அல்லது தனியாரின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
மகளுக்கு உறுதுணையாய் லட்சுமி
”எனது கணவர் இறந்த பிறகு பல துன்பங்களுக்கு மத்தியில் என் மகளைப் படிக்கவைத்தேன். அவளது ஆசைக்கிணங்க வலுதூக்கும் பயிற்சியிலும் சேர்த்துவிட்டேன். பெரிய ஆளாக வர வேண்டும், நாட்டுக்குப் பெருமை தேடித்தர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” எனப் பேச ஆரம்பித்தார் லட்சுமி.
மேலும் அவர், ”தொடர்ந்து, தற்போது வெளிநாட்டில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு அதிகப் பணம் தேவைப்படும் - ஆனால், என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. இதற்கு முன் நடைபெற்ற சிறிய போட்டிகளுக்குக் கடன் வாங்கிதான் அனுப்பிவைத்தேன்.
சமீபத்தில் பெய்த மழையினால் எங்களது வீடு இடிந்து விழுந்துவிட்டது. இந்தச் சூழலில் என் மகளுக்கு யாரேனும் உதவினால் அவள் நிச்சயம் நாட்டிற்குப் பெருமை தேடித் தருவாள்" என்கிறார் நம்பிக்கையுடன்.
கவிதா கூறுகையில், ”சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெள்ளி வென்றதன் மூலம் கஜகஸ்தானில் நடைபெற உள்ள பன்னாட்டுப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளேன். ஆனால், அதற்கான போதிய பொருளாதாரம் இல்லாததால் பொருளாதார உதவி தேவைப்படுகிறது.
திறமைக்கு உதவி தேவை
எனது தாயால் அவ்வளவு பணம் ஏற்பாடு செய்ய முடியாது. யாரேனும் எனக்கு உதவிபுரிந்தால் நிச்சயம் நான் வெற்றிபெறுவேன். என் தாய் நினைத்திருந்தால் என்னை அப்பவே வேலைக்கு அனுப்பியிருக்க முடியும். ஆனால், என் மீது இருந்த நம்பிக்கையை வைத்து எனக்குத் துணை நிற்கின்றார். அதனை நான் காப்பாற்றுவேன்” என்கிறார் உறுதியுடன்.
மேலும், கவிதாவின் பயிற்சியாளர் யுவராஜ் கூறுகையில், ”பன்னாட்டுப் போட்டியில் பங்கேற்க அத்தனை தகுதியும் உள்ள கவிதா, நல்ல திறமையான பெண். தற்போது அவருக்கு உதவி தேவைப்படுகிறது. வரும் 15ஆம் தேதிக்குள் 50 ஆயிரம் கட்டியாக வேண்டும். முன் தொகையாக அதைக் கட்டினால்தான் கஜகஸ்தானில் நடைபெறும் போட்டியில் இவர் பங்கேற்க முடியும்" என்கிறார்.
வலுதூக்கும் போட்டியில் தன் தாய் நாட்டிற்காகத் தடம்பதிக்க காத்திருக்கும் வீராங்கனைக்கு உதவிபுரிய அவரது பயிற்சியாளர் யுவராஜை 98423 95808 என்ற எண்ணிற்குத் தொடர்புகொள்ளலாம்.