நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சமலை வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலைகள் நிறைந்த பகுதியாகும். இங்கு காட்டுப்பன்றி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன.
இந்நிலையில் பச்சமலை பூதக்கால் பகுதியில் வனவிலங்குகளை சமூகவிரோத கும்பல் வேட்டையாடுவதாக வனத் துறைக்குப் புகார் வந்துள்ளது. அவர்களைப் பிடிப்பதற்காக வனத் துறையினர் நேற்று நள்ளிரவில் ரோந்து சென்றுள்ளனர்.
அப்போது பச்சமலை பூதக்கால் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கள்ளத்துப்பாக்கியால் வனவிலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த நபரைப் பிடிக்க வனத் துறையினர் முயற்சிசெய்தனர்.
அப்போது வேட்டையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். வனத் துறையினர் அந்தத் துப்பாக்கியைக் கைப்பற்றி சோதனை செய்தபோது அது நாட்டுத்துப்பாக்கி என்பது தெரியவந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நாட்டுத் துப்பாக்கி திடீரென வெடித்தது.
இதிலிருந்த பால்ரஸ் குண்டு வனக்காப்பாளர் வீரபாண்டியன் கழுத்தில் பாய்ந்தது. பின்னர் படுகாயமடைந்த வீரபாண்டியன், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரவு நேரம் என்பதால் வேட்டையில் ஈடுபட்ட நபரை அடையாளம் காண முடியவில்லை. துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பியோடிய நபரை வனத் துறையினர் தேடிவந்தனர்.
இது குறித்து உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணையில் பூதங்கள் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (26) என்பவர் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து முத்துகிருஷ்ணனை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
வனத் துறை அலுவலர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசு ஊழியர்கள் குறித்து அவதூறு - இருவர் மீது வழக்கு