திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் முகவனூர் ஊராட்சி மணியாரம்பட்டியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இருந்தது. அதன் தூண்கள் அனைத்தும் பழுதாகி விட்டதால் நீர் ஏற்றம் முழுமையாக செய்ய முடியவில்லை. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. சிதிலமடைந்த தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் நீர்தேக்கத்தொட்டியை அகற்ற கடிதம் மூலம் ஆவணங்கள் மட்டுமே தயார் செய்துள்ள நிலையில், பழுதாகியுள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி தூண்கள் சீரமைக்கப்படவில்லை. அதற்கான மாற்று ஏற்பாடும் செய்யப்படவில்லை.
இந்நிலையில், இன்று அதிகாலை தூண்கள் நான்கும் இடிந்து மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி சரிந்து மண்ணில் விழுந்தது. அதிலிருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தரையில் சிதறி வீணானது. அதனைத்தொடர்ந்து நிகழ்விடத்தில் குவிந்த அப்பகுதி பொதுமக்கள் தொட்டியில் இருந்த நீரை வாளி மூலம் கயிறு கட்டி இரைத்து தங்களது வீட்டிற்கு எடுத்து சென்றனர். அதிகாலை நடந்த இச்சம்பவத்தில் யாருக்கும் விபத்து ஏற்படவில்லை.
மக்களின் பிரச்னைகளில் ஓராண்டாக அலட்சியமாக இருந்து வந்த ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், தற்போது அப்பகுதியில் ஏற்படப் போகும் தண்ணீர் பற்றாக்குறையையாவது சரியான நேரத்தில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிக்கலாமே: தண்ணீர் குழாயில் இனி செல்போனுக்கு சார்ஜ் போடலாம் - ஆந்திர மாணவரின் அதிசய கண்டுபிடிப்பு