கரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர இதர வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.
இருப்பினும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பலர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அரசின் உள்ளாட்சித் துறை சார்பில் மலிவு விலையில் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் திருச்சி மாநகராட்சி பாலக்கரை பகுதியில் உள்ள அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில், மலிவு விலையில் காய்கறி விற்பனையை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் என பலரும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “ஒரு வாரத்திற்கு தேவையான 11 வகையான காய்கறிகள், 150 ரூபாய் என்ற மலிவு விலைக்கு தமிழ்நாடு அரசால் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்ற காரணத்திற்காக வீடு தோறும் சென்று, காய்கறி விற்பனை செய்யப்படுகிறது.
இந்தக் காய்கறிகளை மக்கள் வாங்கி பயனடைந்து கொள்ள வேண்டும். வீட்டைவிட்டு வெளியே வராமல் உள்ளேயே இருக்க வேண்டும். திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளை உள்ளடக்கிய, 4 கோட்ட பகுதிகளில் தினமும் இந்த காய்கறி விற்பனை நடைபெறும். மலிவு விலை காய்கறி அடங்கிய இதில்,
- கத்திரிக்காய் - 1 கிலோ,
- தக்காளி - 1 கிலோ,
- முருங்கைக்காய் - கால் கிலோ,
- பச்சை மிளகாய் - கால் கிலோ,
- பீட்ரூட் - அரை கிலோ,
- கேரட் - கால் கிலோ,
- உருளைக்கிழங்கு - 1 கிலோ,
- பெரிய வெங்காயம் - 1 கிலோ,
- தக்காளி - 1 கிலோ,
- வாழைக்காய் - 2,
- தேங்காய் 1, ஆகியவை அடங்கிய இது ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 12 ஆண்டுகளுக்குப் பிறகு செயல்பாட்டிற்கு வந்த உழவர் சந்தை.!