குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் திருச்சியிலும் பல அரசியல் கட்சியினரும் இஸ்லாமிய அமைப்புகளும் போராட்டங்களை நடத்தின. இதைத் தொடர்ந்து நாளை (26ஆம் தேதி) கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என திருச்சியில் காய்கறி விற்பனை செய்யப்படும் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று தமிழ்நாடு வணிகர்கள் சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில சங்கங்கள் கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்தம் 24 சங்கங்கள் உள்ளன. இதில் 20 சங்கங்கள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை. அழுகும் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் காய்கறிகள் தேங்கினால் அதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மறுநாள் விற்பனைக்கு வரும் காய்கறிகளின் அளவு இரட்டிப்பாகிவிடுவதால் விலை குறைந்துவிடும். இதுபோன்ற காரணங்களால் அழுகும் பொருள் விற்பனை செய்யும் காய்கறி வியாபாரிகள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க முடியாது. அதோடு இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அவரவர் தனித்தனியாக எந்த விதமான போராட்டங்களில் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்” என்றார்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்!