திருச்சி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், நாச்சிக்குறிச்சி ஊராட்சியில் அம்மா இளைஞர் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் மைதானத்தை திறந்துவைத்து வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர். விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை வகித்தார்.
விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், “இளைஞர்கள் இடையே தலைமைப் பண்பினை வளர்த்தல், கிராம இளைஞர்களிடையே கூட்டு மனப்பான்மையை உருவாக்குதல், கிராமங்களில் உள்ள விளையாட்டு திறன்மிக்க இளைஞர்களைக் கண்டறிந்து முறையான பயிற்சி கொடுத்து உயர்மட்ட போட்டிகளில் சாதனை படைக்க வைத்தல் போன்றவை இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்” என்றார்.
தொடர்ந்து அமைச்சர் வளர்மதி பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளில் ரூ.64.35 கோடி மதிப்பீட்டில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளன.
மைதானங்களில் தினந்தோறும் பயிற்சி அளிப்பதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி கருவிகள் ஆகியவை வழங்கப்படுகின்றன“ என்றார்.
இதையும் படிங்க: அரசு குழந்தைகள் இல்லத்தில் விளையாட்டுப்போட்டிகள் - வென்றவர்களுக்குப் பரிசளிப்பு