கரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களைக் கிண்டல் செய்யும் செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வகையில் பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்டோரை கிண்டல் செய்து மீம்ஸ், டிக்டாக் போன்றவற்றில் புகைப்படம், வீடியோக்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் திருச்சியில் பிரதமர் மோடியை அவதூறாகச் சித்தரித்து டிக் டாக் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த டிக் டாக் வீடியோவை மூன்று சிறுவர்கள் வெளியிட்டிருந்தனர். அது சமூக வலை தளங்களில் வைரலானது.
இது குறித்து பாஜகவினர் திருச்சி பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பாலக்கரை பீமநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்களும் டிக் டாக் வெளியிட்டது தெரியவந்தது.
மேலும் பீமநகர் மேம்பாலத்திற்கு அடியில் நின்று அவர்கள் டிக்டாக் காட்சியைப் பதிவு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மூன்று சிறுவர்களையும் காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்ற உத்தரவுப்படி மூவரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
இதையும் படிங்க... இந்த ரணகளத்திலேயும் டிக்-டாக்- பெண் கைது!