டெல்லியில் நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் திருச்சி ராமகிருஷ்ணா சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் பைஜி தலைமை வகித்தார். இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மேலும் இஸ்லாமிய பெண்களும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய எஸ்.டி.பி.ஐ தலைவர் ஹஸ்ஸான் பைஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடந்த அமைதிப் போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வன்முறையை ஏவி விட்டு வெறியாட்டம் ஆடியுள்ளனர்.
இதில் 22 பேர் உயிர் பலியாகியுள்ளது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இஸ்லாமியர்களின் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் இதை தடுக்கவில்லை. காவல் துறையும், உளவுத்துறையும் என்ன செய்து கொண்டிருக்கிறது என்றக் கேள்வி எழுகிறது.
பாஜக மூத்த தலைவர் கபில் மிஸ்ரா இந்தப் போராட்டத்துக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்த ஒரு மணி நேரத்தில் இந்தக் கலவரம் நடைபெற்று உள்ளது.
மத்திய அரசு அடக்குமுறையை ஏவி அவர்களுக்கு எதிரான போராட்டத்தை அடக்க நினைக்கிறார்கள். ஆனால் இந்த போராட்டம் மேலும் வீரியமடையும்.
டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களை போல் தமிழ்நாட்டில் நடக்கும் என்பதை போல் எச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டத்திலும் இது போன்ற எதிர் போராட்டத்தை நடத்தும் வகையில் அவர் பேசி உள்ளார்.
அவரை காவல்துறையினர் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அதுமட்டுமின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை கைது செய்ய வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க...’மதமும் சாதியும் பயன்படுத்தியவர்களையே பதம் பார்த்துவிடும் என்பதை பாஜக உணர வேண்டும்’