திருச்சி: தமிழ்நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழு ஊரடங்கு விதிமுறையை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜனனி பிரியா தலைமையிலான தனிப்படையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: முகக்கவசம் அணியாமல் மதுபோதையில் சென்ற மாநகராட்சி ஊழியர் போலீசாருடன் கைகலப்பு
அப்போது புத்தாநத்தம் காவல் எல்லைக்குட்பட்ட பன்னாங்கொம்பு நால் ரோடு பகுதியில் மது விற்பனை செய்த பின்னத்தூரைச் சேர்ந்த சுப்பிரமணி (57) என்பவரிடம் இருந்து 180 மில்லி அளவு கொண்ட 39 பாட்டில்கள் மற்றும் 650 ரூபாய் பணமும், அவரது மகன் முனியப்பன் (39) என்பவரிடமிருந்து இருபத்தி ஏழு பாட்டில்களும், காவல்காரன்பட்டியைச் சேர்ந்த சின்னக்காளை மகன் ஆறுமுகம் (36) என்பவரிடமிருந்து 14 பாட்டில்களையும் தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதேபோல் பொன்னாகவுண்டன் பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி (41) என்பவரிடம் இருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்த வையம்பட்டி காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.