கரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவை அச்சுறுத்திவருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றனர். அவர்கள் உணவுக்காகத் திண்டாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏழைகளுக்கு நேரடியாக உணவுப்பொருள்கள், நிவாரண பொருள்கள் வழங்கும்போது அரசு அலுவலர்கள் உடன் இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறது. அந்த வகையில், திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரண பொருள்களை தொடர்ந்து வழங்கிவருகிறார். அவரது கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வார்டு வாரியாக நிவாரண உதவிகளை வழங்கிவருகிறார்.
அதன்படி, திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பொன்னகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் தலைமையில் இன்று (ஆக.20) அரிசி மூட்டை, பருப்பு மற்றும் 20 வகையான மளிகைப் பொருள்கள் கொண்ட நிவாரண தொகுப்பினை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நிர்வாகிகள் ஜவகர், வழக்கறிஞர் ராஜ்குமார், அன்பரசு, கோபி, முருந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் அணிந்தும் பொருள்களை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்