திருச்சி: தொட்டியம் மதுரைகாளியம்மன் கோயில் பங்குனி தேர் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு பங்குனி தேர் திருவிழா கடந்த 15-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. கடந்த 22ஆம் தேதி காப்பு கட்டுதல், ஆயிரம் பானையில் பொங்கல் வைத்தல், திருக்கதவு திறந்து சிறப்பு பூஜை, பூச்சொரிதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் தலையலங்காரம் நேற்று முன்தினம் (மார்ச் 30) அதிகாலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 5 மணியளவில் பெரிய தேர், சின்ன தேர் திருத்தேர் திருவீதி உலா நடைபெற்றது.
அப்போது பக்தர்கள் பெரிய தேர் மற்றும் சின்னத்தேரை தலையிலும் தோளிலும் பக்தியுடன் சுமந்து சென்றனர். பெரிய தேரில் ஓலைப் பிடாரி அம்மனும், சின்ன தேரில் மதுரைகாளியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய திருத்தேர் திருவீதிஉலா கோட்டைமேடு, வழியாக சென்று பண்ணை வீடு பகுதியை அடைந்தது.
இதை தொடர்ந்து சந்தைபேட்டை, திருச்சி, சேலம் மெயின் ரோடு வழியாக சென்று வானப்பட்டறை மைதானம் சென்று பின்னர் எல்லை உடைக்கும் திருவிழாவும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டியத்தை சேர்ந்த 18 பட்டி கிராம மக்கள், கோயில் நிர்வாகம், கோயில் பூசாரிகள் செய்திருந்தனர். இந்த விழாவில் திருச்சி எஸ்பி சுஜித்குமார் மேற்பார்வையில் 800-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் நாளை தேரோட்டம்..