திருச்சி மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சிவராசு தலைமையில் இன்று நடந்தது. இதில் திருச்சி மாவட்ட பேனர் உரிமையாளர்கள் சங்கத்தினர், திரண்டு வந்து ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், " திருச்சி மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட பேனர் பிரிண்டிங் நிறுவனங்கள் கடந்த 20 வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது.
இதில் பலரும் 20 முதல் 25லட்சம் ரூபாய் வரை வங்கியில் கடன் பெற்று இந்த தொழிலை மேற்கொண்டுவருகின்றனர். ஒவ்வொரு நிறுவனத்திலும் குறைந்தபட்சம் 25 தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர். இந்த தொழில் நசுக்கப்பட்டால் பல்வேறு குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும்.
சென்னையில் பேனர் விழுந்து ஒரு இளம்பெண் மரணம் அடைந்த சம்பவம் துயரமானதாகும். அதை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. எனினும் இந்த ஒரு சம்பவத்தைக் காட்டி பேனர்கள் வைப்பதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதைக் கைவிட வேண்டும்.
பேனர் வைப்பதற்கு மாநகராட்சி, காவல் ஆணையர் எனப் பல இடங்களில் அனுமதி வாங்க வேண்டும் என்ற விதிமுறைகள் எங்களது தொழிலுக்குத் தடையாக இருக்கும் . அதனால் பிளக்ஸ் பேனர் வைப்பதற்கான அனுமதியை இணையம் மூலம் பெறும் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் " என்றார்.