திருச்சி: வெற்றிநடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அந்தவகையில் நேற்று (டிச. 30) திருச்சி மாவட்டம் தொட்டியம், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோியில் பட்டர்கள் சுந்தர் பட்டர், நந்து பட்டர் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மூலவர் ரங்கநாதரின் முத்தங்கி சேவையை தரிசனம்செய்த முதலமைச்சர், பின்னர் தாயார் சன்னதிக்குச் சென்று தரிசனம்செய்தார். இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளுக்கு பழங்கள் வழங்கி ஆசிபெற்றார்.

அப்போது அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் பகுதியிலும், பின்னர் சோமரசம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழையிலும் வேனில் இருந்தபடியே பரப்புரை மேற்கொண்டார். இதேபோல அவருக்கு ஏராளமான அதிமுகவினர் கொட்டும் மழையிலும் திரண்டிருந்தது வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: 'பணம் கேட்டால் மூக்கை உடைப்பார்கள், ஸ்டாலின் கட்டப்பஞ்சாயத்து செய்வார்' - முதலமைச்சர் பழனிசாமி