திருச்சி மாவட்டம் மணப்பாறை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருச்சி மண்டல இணை இயக்குநர் எஸ்தர் ஷீலா, உதவி இயக்குநர் சந்துரு அறிவுரையின்படி மத்திய அரசின் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில், 1ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கால்நடை உதவி மருத்துவர் சுதா தலைமையிலான மருத்துவக் குழுவினர் மரவனூர், அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏழு ஊராட்சிகளுக்குள்பட்ட கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று காலை ஆறு மணிமுதல் தடுப்பூசிகள் போடும் பணியினை மேற்கொண்டுவருகின்றனர்.
இது குறித்து மருத்துவக் குழுவினர் கூறுகையில், "கால்நடை வளர்ப்பவர்கள் மூன்று மாதத்துக்கு மேல் வயதுள்ள கன்றுகள், சினைப் பசுக்கள், கறவைப் பசுக்கள், எருமைகள், எருதுகளுக்குக் கட்டாயம் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
முகாமிற்குக் கால்நடைகளைக் கொண்டுவரும் உரிமையாளரின் ஆதார் எண் குறிக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும்.
இது மத்திய அரசு திட்டம் என்பதால் கால்நடைகளின் காதுப் பகுதியில் பார்கோடுடன் கூடிய காது வில்லைப் பொருத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் கால்நடைகளுக்கு வரும் நோய்களைக் கண்டறிய இது ஏதுவாக இருக்கும்" என்றனர்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற வேண்டிய கோமாரி நோய் சிறப்பு முகாம் 144 தடை உத்தரவு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கரோனாவையும் பொருட்படுத்தாது கால்நடைகளுக்காகக் கோமாரி நோய்த் தடுப்பூசி சிறப்பு முகாமை செயல்படுத்திவரும் மருத்துவக் குழுவினரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க : 'சீனப் பொருள்களுக்கு தடை, இந்திய பொருளாதாரத்தை பாதிக்காது'- சுதேஷ் வர்மா