திருச்சி கன்டோன்மெண்ட் பாரதியார் சாலையில் தலைமை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தலைமை தபால் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இன்றிரவு (அக்.13) தலைமை தபால் நிலையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தபால் நிலைய வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தபால் நிலைய அலுவலர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பின்னர் திருச்சி மாநகர காவல் துறையின் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மற்றும் செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
தபால் நிலையம் முழுவதும் அங்குலம் அங்குலமாக நிபுணர்கள் சோதனையிட்டனர். தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. எனினும் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இதைத்தொடர்ந்து அது வெடிகுண்டு புரளி என்பது உறுதியானது. எனினும் தலைமை தபால் நிலைய வளாகத்தில் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெடிண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து கன்டோன்மெண்ட் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அமமுக வெற்றிவேல் மருத்துவமனையில் அனுமதி!