திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 21). அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் வெங்கட், கோபி.
ஆற்றில் இருந்து, மாட்டு வண்டிகள் மூலம் திருட்டு மணல் அள்ளுவது தொடர்பாக ரஞ்சித்திற்கும் இந்தச் சகோதரர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வெங்கட், கோபி ஆகியோரது தாயாரை ரஞ்சித் திட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் மது அருந்திவிட்டுச் சென்று, போதையில் ரஞ்சித்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து தகராறு முற்றியதில் சகோதரர்கள் இருவரும் ரஞ்சித்தை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரஞ்சித் உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஜீயபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் கோகிலா தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, வெங்கட், கோபி இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், மது போதையில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : டாஸ்மாக் திறப்பை எதிர்த்து திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் ஆர்ப்பாட்டம்