ஜேசிஐ (Junior Chamber of international) என்ற பன்னாட்டு அமைப்பின் துறையூர் கிளை, காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் ஆகியன இணைந்து, துறையூர் காவல் நிலையம் முன்பு அன்பு சுவர் ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சுவரில், முகக்கவசம், கிருமி நாசினி , சோப்பு, பிரஸ்-பேஸ்ட், பிஸ்கட், பிரட், குடிநீர் பாட்டில், உணவு பொட்டலங்கள், பழவகைகள், தட்டு, டம்ளர், பழைய - புதிய துணிகள், புதிய புடவைகள், கைலிகள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இவைகளைத் தேவைப்படுவோர் இலவசமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த அன்பு சுவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முசிறி, திருச்சி கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரன், முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் பிரமானந்தம் உள்படப் பலர் பங்கேற்றனர்.
மேலும் உதவி தேவைப்படுவோர், அன்புச் சுவர் அருகே வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் பதிவு செய்தால், ஜேசிஐ அமைப்பினர் நேரடியாகச் சென்று, கோரிய உதவியைச் செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.