திருச்சி: நெடுமலை கிராமத்தை சேர்ந்த சதீஸ் குமார் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் திருச்சியை சேர்ந்த பாலா பாரதி, போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் மாணிக்க ராஜ், வரலாற்று ஆசிரியர் கருப்பையா, தாயனூர் பழனியாண்டி, கொத்தமங்கலம் சத்யசீலன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
செக்கானது 76 சென்டிமீட்டர் வெளிவிட்டமும், 48 சென்டிமீட்டர் உள்விட்டமும் , 13 சென்டிமீட்டர் விட்டத்தை கொண்ட துளையுடன் காணப்படுகிறது. ஒரு அடி ஆழத்தில் உட்புறம் பானை போன்ற குழியுடன் எண்ணெய் ஆட்டுவதற்கான அமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. செக்கில் மூன்று வரிகளுடன் கூடிய எழுத்துகளை கல்வெட்டாக பதித்துள்ளனர்.
![செக்கு கல்வெட்டு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-02-czechinscriptionfoundintrichy-7210723_11052022200507_1105f_1652279707_597.jpg)
எழுத்துப் பொறிப்பின் அடிப்படையில் இச்செக்கு கி.பி 9ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பழங்காலத்தில் எண்ணெய் வித்துக்களை ஆட்ட ஊருக்கு பொதுவாக இருக்கும் கல் செக்கில் மக்கள் நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்களை ஆட்டி எண்ணெய் எடுத்து பயன்படுத்தவார்கள்.
![செக்கு கல்வெட்டு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-02-czechinscriptionfoundintrichy-7210723_11052022200507_1105f_1652279707_415.jpg)
திருச்சியில் செக்கு கல்வெட்டுகள் அதிகம் கிடைக்காத நிலையில் இச்செக்கு கல்வெட்டு முக்கியத்துவத்தை பெறுகிறது. பழமையையும், வரலாற்றுச் சிறப்பையும் கருதி இதைப் பாதுகாக்க வேண்டும் என ஆய்வாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மதுரை அருகே 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டு சிற்பங்கள் கண்டெடுப்பு