திருச்சி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த 41 பேர் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு சென்று வழிபட முடிவு செய்து, நேற்று சுற்றுலா பேருந்தில் கோயிலுக்குப் புறப்பட்டனர். இவர்கள் இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் முசிறி அருகே குணசீலம் என்ற இடத்திற்கு வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சிறிது தூரத்தில் சாலையோரம் இருந்த வாய்க்காலில் தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
பேருந்துக்குள் இருந்தவர்கள் அலறிய சத்தம் கேட்டு விரைந்த அக்கம்பக்கத்தினர் பேருந்துக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 21 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 11 பேர் முசிறி அரசு மருத்துவமனையிலும், 10 பேர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வாத்தலை காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து கவிழ்ந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.