நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், பாஜக தனது வேட்பாளர் பட்டியலை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது.
இந்நிலையில், இன்று திருச்சியில் நடந்த கூட்டத்தில் பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ஐயாக்கண்ணு, மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய தமிழக விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். தொடர்ந்து, திமுகவும் அமமுகவும் விவசாய கடன் தள்ளுபடிக்கு ஆதரவு தெரிவித்தது போல், பாஜக தங்களது கோரிக்கைகளை அறிக்கையில் சேர்த்துக்கொள்ளவே இதை செய்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகரராவின் மகளை எதிர்த்து 49 விவசாயிகள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.