சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தன் மனைவி பெயரில் மருத்துவ ஆய்வகத்தை நடத்திவருகிறார். தொழிலை விரிவுபடுத்துவதற்காக பஞ்சாப் வங்கியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய சொத்துக்களை வங்கியில் அடமானம் வைத்து சுமார் 22 லட்ச ரூபாய் கடன் பெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து அவர் மகன் தனியாக தொழில் வைத்து தொடங்குவதற்காக சுமார் 85 லட்ச ரூபாய் பணம் தேவைப்பட்டது.
அப்போது ஜஸ்ட் டைல் என்ற அழைப்பு மூலம் வினோ ஆனந்த் என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவரிடம் ராஜ்குமார் தன்னுடைய தேவைகளை பற்றி கூறியிருக்கிறார். இதனால் தனக்கு தெரிந்த அரசு வங்கியில் சுமார் 85 லட்சம் ரூபாய் கடன் பெற்று தருவதாக ஆனந்த் கூறியுள்ளார்.
அதற்காக ராஜ்குமார் அவருடைய ஆவணங்களின் விவரங்களை வைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கேட்டபோது சுமார் 85 லட்ச ரூபாய் தருவதாக வங்கியிலிருந்து அவருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் சொத்து ஆவணங்கள் அனைத்தும் 22 லட்ச ரூபாய் கடனில் பஞ்சாப் வங்கியில் இருப்பதால் அதை பணம் கட்டி மீட்க வேண்டியிருந்தது.
எனவே ராஜ்குமாரிடம் அவ்வளவு பணம் இல்லாததால் வினோ ஆனந்த் மூலம் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துவரும் ராஜா என்பவரை அணுகி, அவரிடம் சுமார் இரண்டரை லட்ச ரூபாய் வட்டிக்கு 22 லட்ச ரூபாய் கடன் பெற்றார். 15 நாட்களுக்குள் 2 லட்ச ரூபாயை வட்டியுடன் பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும் என்பது ராஜாவின் நிபந்தனை. இதனிடையே 22 லட்ச ரூபாய் பணத்தை வங்கியில் செலுத்தி அந்த ஆவணத்தை பெற்ற ராஜ்குமார், ராஜாவிடம் கொடுத்துள்ளார்.
பணம் வாங்கி 15 நாட்கள் ஆனதால் ராஜ்குமார் சுமார் இரண்டரை லட்ச ரூபாய் பணத்தை வட்டியாக கட்டியுள்ளார். இதுதொடர்பாக ராஜாவுக்கும் ராஜ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது 15 நாட்களுக்குள் தன்னிடம் பெற்ற கடனை கொடுக்கவில்லை என்றால், ராஜ்குமாரின் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை தனக்கு எழுதி தருமாறு ராஜா மிரட்டியுள்ளார்.
இந்த விவரங்கள் தெரிந்து ராஜ்குமாரின் மனைவி சுமார் 60 தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அம்பத்தூரில் உள்ள ராஜ்குமாரின் ஆய்வகத்தை ராஜாவின் ஆட்கள் பூட்டிவைத்துள்ளனர்.
தொடர்ந்து அந்த கந்துவட்டி கும்பல் அவருடைய மனைவி சிகிச்சைப் பெற்றுவந்த மருத்துவமனைக்கு சென்று இன்று அதிகாலை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து ராஜ்குமாருக்கு 85 லட்ச ரூபாய் கடன் அரசு வங்கி வழங்குவதாக இருந்த நிலையில், ராஜா தரப்பினர் அந்த வங்கிக்கு சென்று வங்கி மேலாளரிடம் தகராறில் ஈடுபட்டு ராஜ்குமாருக்கு வழங்கவிருந்த கடனும் வங்கியிலிருந்து மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராஜ்குமாரும் அவர் மகனும் சென்னை ஆணையரை சந்தித்து ராஜா குறித்து புகார் மனு அளித்து உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்க: 'கந்துவட்டி' கும்பலுக்கு எஸ்.பி. எச்சரிக்கை