திருவண்ணாமலை நகரம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் தெருவில் வசித்துவருகிறவர், பாபு. இவர் குடிபோதையில் அண்ணா நுழைவு வாயிலிலிருந்து சாலை ஓரங்களில் தற்காலிக கடைகளை வைத்திருப்பவர்களிடம் கடுமையாக நடந்துள்ளார்.
குறிப்பாக, ஆம்னி வேனில் பப்பாளி பழங்களை விற்ற வியாபாரியை பயமுறுத்தி அவரிடமிருந்தப் பழத்தை எடுத்து வீசியுள்ளார். அது மட்டுமில்லாமல் வண்டியின் கண்ணாடிகளை உடைத்தும், எடை தராசுகளை வீசியும் உள்ளார்.
இதைத் தொடர்ந்து தள்ளுவண்டிகளில் வாழைப் பழம் விற்பனை செய்பவர்களை அடித்து பழங்களை கீழேக் கொட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து ஆட்டோ கண்ணாடியை உடைத்தும், அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் முன் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். அதைப் போலவே, இரண்டு ஆட்டோக்களின் கண்ணாடியையும் உடைத்துவிட்டு, அவ்வழியே வந்த ஒருவரை ரத்தம் சொட்டும் அளவிற்குத் தாக்கியுள்ளார். தற்போது, அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் திருவண்ணாமலை நகரின் பிரதான சாலையில் இப்படி ரவுடிகளின் அட்டகாசம் தலைதூக்கி இருப்பது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் ரவுடி பாபு என்பவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
குடிபோதையில் பாபு செய்த செயலால் பாதிப்புக்கு உள்ளான வாகனங்களின் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களில் கண்ணாடிகளை உடைத்த ரவுடியிடமிருந்து இதற்கு நிவாரணம் எப்படி பெறுவது என்று தெரியாமல் மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.
இது போன்ற செயல்களை தொடக்கத்திலேயே சரிசெய்து ரவுடிகளின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு தாக்குதல் நடத்திய ரவுடியிடம் இருந்து அபராதம் வசூலித்து நிவாரணம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.