திருப்பூர் அய்யம்பாளையம் அருகே உள்ள சபரிநகர் பகுதியில் குடியிருந்து வருபவர் சுப்புலட்சுமி. இவர் டிக்டாக் செயலியில் சூர்யா என்ற பெயரில் சேட்டைகள் செய்துவந்ததால், ரௌடி பேபி சூர்யா என அழைக்கப்பட்டார். பின்னர் இதையே தனது பெயராகவும் மாற்றிக் கொண்டு சமூக வலைத்தளங்களில் வலம் வந்தார்.
இந்நிலையில் சிங்கப்பூர் சென்றிருந்த சூர்யா, கடந்த 16ஆம் தேதி திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். இதனால் அவருக்கு கரோனா பரிசோதனை செய்த அலுவலர்கள், தனிமைப்படுத்தப்பட்ட வீடு என நோட்டீசும் வீட்டின் சுவற்றில் ஒட்டினர். அப்போது தான் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றால் அரசு மருத்துவமனையில் தனக்கு தனி அறை தர வேண்டும் என அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சூர்யா, செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வண்ணம் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனையடுத்து இது தொடர்பாக செய்தியாளர் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி காவல்துறையினர் சூர்யா மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(b), 500 மற்றும் 506(2) (ஆபாசமாக பேசுதல், அவதூறு பரப்புதல், கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க...கரோனாவால் கைதிகளின் கைவினைப்பொருள்கள் தயாரிக்கும் பணி நிறுத்தம்!