உருவப்படம் கிழிக்கபட்ட கடத்தூர் பேருந்து நிலையப் பகுதியில் வி.சி.க கட்சியினர் திரண்டு வருவதால் பரபரப்பு.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கடத்தூரில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு மடத்துக்குளம், உடுமலை, கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பிறந்த நாள் வாழ்த்துப் பதாகைகள், வி.சி.க.வினரால் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு கடத்தூர் பேருந்துநிலையப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த திருமாவளவன் உருவப் படத்தில் கண், மூக்கு, மார்பகப் பகுதிகளை, அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த விசிகவினர் 100-க்கும் மேற்பட்டோர் மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் தலைமையில் ஒன்று திரண்டு கணியூர் காவல் நிலையத்தில் திருமாவளவன் உருவப்படம் கிழிக்கபட்டது குறித்துப் புகார் அளித்தனர். அப்போது, உருவப்பட கிழிப்பில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தினர்.
இதுவரை உருவப்பட கிழிப்பு சம்பந்தமாக காவல்துறையினர் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் திருமாவளவன் உருவப்பதாகைகள் கிழிக்கப்பட்ட, கடத்தூர் பேருந்து நிலைய பகுதியில் குவிந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.