திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அலங்கியம் செல்லும் சாலையில் எர்ணா மேடு பகுதியில் ஸ்ரீ பூமிநாதர் ஈஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஈஸ்வரன், அம்மன், முருகன், நந்தி போன்ற சிலைகள் வைத்து மாத மாதம் பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை போன்ற நாட்களில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் கோயிலில் பூஜைகள் நடைபெற்றது. கோயிலில் உள்ள பூசாரி கோயிலை திறந்து வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது சுமார் 10 மணி அளவில் 40 வயது மதிப்புள்ள ஒருவர் திருநீர் பட்டை, காவி வேட்டி கட்டிக்கொண்டு கோயிலுக்கு வந்துள்ளார். பின்னர் கோயிலுக்குள் சென்று யாரும் பார்க்காத நேரத்தில் சாமி சிலையில் இருந்த சுமார் மூன்று சவரன் மதிப்புள்ள சுமங்கலி நகையை திருடிச் சென்றுள்ளார்.
இதனிடையே இன்று கோயில் பூசாரி கோயிலை திறந்து பூஜை செய்ய உள்ளே சென்று பார்த்தபோது சிலையில் இருந்த சுமங்கலி நகை காணாமல்போனதைக் கண்டு அதிர்ந்து கோயில் நிர்வாகி செந்தில்குமாரிடம் தகவல் தெரிவித்தார்.
கோயில் நிர்வாகிகள் விரைந்து சென்று அம்மன் சிலை மற்றும் கோயில் முழுவதும் தேடியும் நகை கிடைக்காததால் உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த தாராபுரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:சனிப்பெயர்ச்சி:மொராட்டாண்டி சனீஸ்வரபகவான் கோயிலில் சிறப்பு அபிஷேகம்