நாடு முழுவதும் கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கரோனா தொற்று விழுக்காடு குறைந்து வருகிறது. இதனால் அரசு நவம்பர் 16ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளை திறப்பதற்கு முடிவெடுத்துள்ளது.
அரசின் முடிவிற்கு பெற்றோர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், "திருப்பூர் மாவட்டத்திலுள்ள 401 அரசு, தனியார் பள்ளிகளில் இந்த கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. முன்னதாக கூட்டத்திற்கு வரும் பெற்றோர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சானிடைசர் வழங்கப்பட்டது. அதன் பின்னர் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகள் திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து விண்ணப்பம் வழங்கப்பட்டது. அதனை பெற்றோர்கள் பூர்த்தி செய்தபின் பெறப்பட்டது. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் இன்று (நவ.9) மாலைக்குள் கணக்கீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்" என தெரிவித்தார்.
இந்த கருத்துக் கேட்பு கூட்டம் குறித்து பெற்றோர்கள் கூறுகையில், "கடந்த 8 மாதத்திற்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. குழந்தைகளின் கல்விக்கு மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் உடனடியாக திறக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும். எனவே உடனடியாக அரசு பள்ளிகளை திறக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல் சேலம் கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம், மாணவ மாணவிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் திரளான பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்களின் விருப்பங்களை கடிதமாக எழுதி வழங்கினர்.
பெரும்பாலான பெற்றோர்கள் உரிய பாதுகாப்பு வசதி செய்து, அதன்பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் என்றனர். ஆன்லைன் வகுப்பில் படிக்கும் பாடங்கள் தங்களுக்கு புரியவில்லை. அதனால் பாதுகாப்பு வசதி ஏற்படுத்தி, உடனடியாக பள்ளிகளை திறக்க வேண்டும் என மாணவ மாணவிகள் விருப்பம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாடத்திட்டத்தை வெளியிடும் முன் ஆசிரியர்களிடமும் கருத்து கேட்கக் கோரிக்கை!