திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்து கவுண்டன் வலசு என்ற கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டுவருகிறது. இந்த கடையில் செப்டம்பர் ஏழாம் தேதி இரவு அதன் ஊழியர்கள் பணத்தை எண்ணிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் டாஸ்மாக் ஊழியர்களிடம் மதுபானம் வாங்குவது போல் நடித்துள்ளனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த மிளகாய் பொடியை ஊழியர்கள் மீது தூவி, கத்தியை காட்டி மிரட்டி 1.43 லட்சம் பணத்தையும், ஊழியர்களிடமிருந்த ஒரு சவரன் தங்க நகையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திசா மிட்டல் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். அவரின் ஆலோசனையின்படி தாராபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயராமன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
நேற்று (செப்.26) மாலை மூலனூரில் காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியம்மாள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த கலைவாணன் என்பவரை பிடித்து விசாரித்தார்.
கலைவாணன் முன்னுக்குப் பின் முரணாக பேசியதில் சந்தேகமடைந்த காவலர் பாண்டியம்மாள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு நடந்த விசாரணையில் டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்த நபர் என்பது தெரியவந்தது.
மேலும் கலைவாணன் உடன் சேர்ந்து மேலும் மூன்று பேர் கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே காவல் துறையின் கலைவாணன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீதமுள்ள மூன்று பேரை தனிப்படை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.