தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி (33) என்பவர் தன் மனைவியுடன் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவர் இதேப் பகுதியில் உள்ள நான்கு வயது சிறுமியிடம் அன்பாகப் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி தனக்கு தொடர்ந்து வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்ததில் அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியிடம் பெற்றோர் இது குறித்து விசாரித்ததில் தன்னிடம் கந்தசாமி அத்துமீறியது குறித்து கூறியுள்ளார்.
இதன் பின்னர் கந்தசாமியிடம் சிறுமியின் பெற்றோர், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் விசாரித்தபோது கந்தசாமி முறையாக பதிலளிக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் கந்தசாமியை மரத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கந்தசாமியை மீட்டு திருப்பூர் வடக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் கந்தசாமியின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.