காங்கேயம் ஒன்றியம் பாப்பினி ஊராட்சி உத்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60). விவசாயியான இவர் 35-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்துவருகிறார்.
சுப்பிரமணி தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக, ஆண்டிகாட்டுத் தோட்டத்தில் நேற்று (செப்டம்பர் 2) காலை விட்டிருந்தார். மதியம் 3 மணி அளவில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
அப்போது ஆடுகள் தென்னைமரத்தின் அடியில் நின்றுகொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் மின்னல் தாக்கியதில் 15 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.
இதுபற்றி தகவல் அளிக்கப்பட்ட நிலையில், காங்கேயம் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவக் குழுவினர், ஆடுகளின் உடல்களை உடற்கூறாய்வு செய்தனர்.
இந்த ஆடுகளின் மதிப்பு ரூ.2 லட்சம் எனவும், இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயி சுப்பிரமணி தரப்பிலிருந்து கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நொய்யல் ஆற்றில் மனிதக் கழிவுகள் கலப்பு!