திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தளவாய்ப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், கட்டுமான தொழிலாளியாகப் பணிபுரிந்துவருகிறார். இவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு 2 வயதே ஆன தன்வந்த் யாதவ் என்ற ஆண் குழந்தை உள்ளது.
தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த 2 நாள்களாகப் பலத்த மழை பெய்துவருகிறது. தொடர் மழையின் காரணமாக சிறுவனின் வீட்டின் முன் இருந்த பழைய வீடு ஒன்றின் சுவர் மழையில் நனைந்து நன்றாக ஊறி இருந்தது.
இதையடுத்து சிறுவன் தன்வந்த் யாதவ் தனது வீட்டு அருகே இருந்த பழைய வீட்டு சுவர் பக்கத்தில் நேற்று (செப். 7) மாலை விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் பழைய சுவர் இடிந்து, அவன் மீது விழுந்தது.
பின்னர் அலறல் சத்தம் கேட்டுவந்த அக்கம்பக்கத்தினர், இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட சிறுவனை மீட்க முயன்றனர்.
நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் மயங்கிய நிலையில் இருந்த சிறுவனை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர்.
அப்போது பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள், சம்பவ இடத்திலேயே சிறுவன் இறந்துவிட்டதாக கூறினார். இதைக் கேட்டு உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை வேதனைக்குள்ளாக்கியது.
இந்தச் சம்பவம் குறித்து அலங்கியம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சிறுவனின் உடல் உடற்கூறாய்வுக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெளுத்து வாங்கும் மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு!