திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட மாணவிகளின் குடும்பத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
நீட் தேர்வு முடிவுகள் நேற்றைய முன் தினம் வெளியான நிலையில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதாக திருப்பூரைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ உட்பட தமிழ்நாட்டில் மூன்று மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களின் மரணத்திற்கு நீதி கேட்டும், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத்தரக்கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். போராட்டக்காரர்களை காவல் துறையினர் கைது செய்யும்போது காவல் துறையினருக்கும் அவர்களுக்குமிடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த மறியல் போராட்டத்தில் திருப்பூர் பல்லடம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.