கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை என்ற நூல் வெளியீட்டு விழா திருப்பூரில் நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த கவிஞர் வைரமுத்து பேசியதாவது,
"நான் ஒரு கருவி மட்டும்தான். இந்தக்கருவியின் வழியாக மூவாயிரம் ஆண்டுத் தமிழ் இந்நூல் வாயிலாக பாய்ந்திருக்கிறது. தமிழர்களும், தமிழர் அல்லாதவர்களும் தமிழ் ஏன் பயில வேண்டும் என்பதற்கும் இந்தியப் பண்பாடு என்பது சமஸ்கிருதத்தால் ஆக்கப்பட்டதா? தமிழால் ஆக்கப்பட்டதா? என்ற கேள்விக்கும் விடைதருகிறது. தமிழர்கள் ஞானச் செல்வத்தை மூலத்திலிருந்து பெற்றார்களா? அல்லது நகலில் இருந்து பெற்றார்களா? என்ற கேள்விக்கும் இப்புத்தகம் விடைதருகிறது.
இன்றைய நவீன உலகத்தில் வாழ்கிற கணிப்பொறி தலைமுறை தமிழை ஏன் தங்கள் சொத்தாக கொள்ளவேண்டும், ஏன் வாழ்வியல் மொழியாக கொண்டாட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது. தமிழாற்றுப்படை என்பது வெறும் புத்தகமல்ல. ஒரு ஞானப்பேழை. அந்தப்பேழை தமிழ்மொழி தனக்கு அளித்தது என்று அவர் பெருமிதம் கொண்டார்.
மேலும் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் என்றைக்கு தமிழ் ஆட்சி மொழியாக ஒலிக்கப்படுகிறதோ அந்தக்காலமே தமிழர்களின் கனவு நிறைவேறும் காலம் என்றார். தமிழாற்றுப்படை நூலிற்காகவே திரையுலகில் பல வாய்ப்புகளை நிராகரித்துவந்தேன். தற்போது நூலிண் பணிகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் திரைப்பட பாடல்கள் எழுதும் பணியைத் துவங்கியுள்ளேன் என்றார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் காவியத்திற்கு மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து கூட்டணியின் வாயிலாக பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கான தமிழ் செழுமை கொழிக்கும் பாடல் வரிகள் விரைவில் உங்களை வந்தடையும் என அவர் கூறியுள்ளார்.