நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 1) இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளன பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகை அன்று ஒட்டகம், ஆடு, மாடுகளை குர்பானி கொடுப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஒட்டகம் மற்றும் பசுமாட்டினை குர்பானி கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் ஊசூர் அடுத்த பூதூர் பகுதியில் உள்ள இஸ்லாமிய அறக்கட்டளை சார்பில், 80 பசு மாடுகளை கூட்டாக குர்பானி கொடுக்க இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் அரியூர் காவல் துறையினர், அங்கு ஆய்வு செய்தபோது சுமார் 80 மாடுகளை குர்பானி கொடுக்க இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அறக்கட்டளை நிர்வாகிகளுடன் அரசு அலுவலர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரசு உத்தரவை மீறி தாங்கள் குர்பானி கொடுக்கப்போவது இல்லை என அவர்கள் உறுதியளித்ததையடுத்து, அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க:குமரியில் தகுந்த இடைவெளியுடன் கொண்டாடப்பட்ட பக்ரீத்!