திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. அழகான வயல்களுடன் காட்சித்தரும் மலைப் பகுதியில் இந்த அருவி இருப்பதால் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்கிறது.
அருவியின் அருகில் லிங்க வடிவ முருகன் ஆலயம் உள்ளது. பருவ காலங்களில் இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகளுக்கு கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகிறது.
மூலிகை மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவே இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால் இங்கு குளிப்பது பல நோய்களை குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
வருடத்தின் எல்லா நாட்களிலும் நீர்வீழ்ச்சியில் சீரான சீதோஷ்ணநிலை நிலவுவதால் அனைத்து நாட்களிலும் மக்கள் செல்லக்கூடிய ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாகும்.
தற்போது ஏலகிரியில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அரசு தடை விதித்துள்ளது.
இருப்பினும் கரோனா நோய்த் தொற்று பாதிப்பை உணராமல் அப்பகுதி மக்கள் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆனந்தமாக குளியல் போட்டு வருகின்றனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் படி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வைதேகி நீர்வீழ்ச்சி தெரியும் - தொள்ளாயிரம் மூர்த்திகள் கண்டி தெரியுமா? வாங்க தெரிந்துகொள்ளலாம்